ஞாயிறு, 7 செப்டம்பர், 2014



கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - சுவிஸ் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட, திரு. சண்முகநாதன் அவர்களுடனான சந்திப்பு
 17.08.2014 அன்று மாலை 6 மணியளவில் சூரிச் மாநிலத்தில் நடைபெற்றது. அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் வந்திருந்தனர்.
அறிமுகத்தைத் தொடர்ந்து திரு. சண்முகநாதன் அவர்கள் உரையாற்றினார். எமது பாடசாலையின், கிராமத்தின் இன்றைய நிலை, இதுவரை செய்யப்பட்ட திட்டங்கள், இனி என்ன செய்யப்பட வேண்டும் போன்றன பற்றிய நீண்ட உரையாய் இருந்தது.
உணர்வும், உணர்ச்சியும் கலந்ததோர் நிலை.
எம் கிராமம் மரங்களின்றி, நீரின்றி, பறவைகளின்றி ஏதோ ஒன்றாய் மாறிக்கொண்டிருக்கும் நிலை. நின்ற இடத்தில் மாடுகள் விழுகின்றன. பிள்ளைகளின் முன்னேற்றமில்லா கல்விநிலை, அம் மக்களின் ஏதோ ஒன்றாய் வாழும் நிலை இப்படி எத்தனையோ இறுக்கங்களின் பிடிக்குள் சிக்கிக்கொண்டிருந்த தன் கிராமத்தில் போய் நின்று, தன் மக்களுக்காக இருக்கும் வரை ஏதாவது செய்து, என் கிராமத்தை முன்னேற்ற வேண்டும் எனத் துடிக்கும் ஓர் சமூகப் போராளி. அவர் உரையின் முழச் சாரமும் பாடசாலை, கிராம முன்னேற்றம் என்பதைச் சுற்றியே இருந்தது.
கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்குத் தேவை நீர். அதாவது நிலத்தடி நீர் சேகரிப்பு. இப்படி எம் கிராமத்தின் முக்கிய தேவையான நிலத்தடி நீர் சேகரிப்பிற்கு குளங்கள், ஓடைகள் தூர் வாரப் பட வேண்டும். அதற்கான இயந்திரம் ஒன்று உடனடியாக வாங்கப் பட வேண்டும். இதுவே முக்கியமானதும், முதன்மையானதும் எனக் கூறினார். நீர் இல்லாததனால் வாழ்க்கையையே இழந்துகொண்டிருக்கிறோம் என்றார். அதன்படி தூர் வாரும் இயந்திரம் வாங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதெனவும், செலவை, கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கங்களினூடாக அந் நாடுகளிலுள்ள எமதூர் மக்களிடம் சேகரிப்பதென முடிவெடுக்கப்பட்டது.
இதன் முக்கிய அங்கமாக வீதியோரங்களில் மரங்கள் நடுவதற்கான முன்னெடுப்புகளை செய்துவிட்டு வந்திருப்பதாக கூறினார். நீண்ட தூரத்திற்கு மரக்கன்றுகள் வைத்து, அதற்கு பாதுகாப்பரண் அமைத்தல் வேண்டும் என்றார். இதற்குண்டான முழுச் செலவையும் திரு. இராசமாணிக்கம் ரவீந்திரன் வழங்குவதாக முன்வந்தார்.
தற்போதைய உடனடி தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காய், இரண்டு இடங்களில் ( மடத்துவெளி முருகன் கோவில் அருகாமையிலும், ஊரைதீவு பாணாவிடைச் சிவன் கொவில் அருகாமையிலும்) ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான செலவை வழங்கவதற்கு ஏற்கனவே திரு. இ.ரவீந்திரன் அவர்கள் முன்வந்திருந்தார். அடுத்தொன்றிற்கானதை திரு. அரியபுத்திரன் நிமலன் உதவி புரிவதாக கூறினார். ஊரைதீவினூடாக கேரதீவு செல்லும் வீதி இருளடைந்து கிடைப்பதாகவும், அதனால் பழுதடைந்து கிடக்கும் அந்த வீதிகளில் இரவில் செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே அங்கு வீதி விளக்குகள் பொருத்துவதற்கு உதவினால் நல்லது என்றார். அதற்கான செலவுகளை திரு. நா. ஜெயக்குமார் அவர்களும் திரு. கு. சுரேஸ்குமார் அவர்களும் பொறுப்பெடுத்தனர்.
பாடசாலை அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலில், எம் பாடசாலையில் நிரந்தர கணணி வகுப்பு தொடங்கினால் மாணவர்களுக்கு உதவியாயிருக்கும் என்றார். அங்கு ஏற்கனவே 10 கணணிகள் உள்ளன. ஆனால் உதவி அடிப்படையில் இலவசமாக கற்பிக்கப்படுகிறது. பாடசாலைக்கு மேலும் சில கணணிகள் வழங்குவதற்கு திரு. இ. சிறீஸ்கந்தராஜா அவர்கள் முன் வந்தார். அத்துடன் நிரந்தர ஆசிரியருக்கான சம்பளப் பணம் மாதா மாதம் கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிஸ் கிளை வழங்க முன்வந்தது.
முக்கியமாக எமது பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தின் தேவை கருதி திரு. இராமனாதி அவர்கள் 32 பரப்புக் காணியை இலவசமாக வழங்கியுள்ளார். அது ஒரளவு புனரமைக்கப்பட்டு பாவிக்கப்படுகிறது. எனினும் அம் மைதானம் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப் படவேண்டும். அதற்கு மைதானத்தைச் சுற்றி மதில் அமைப்பது அவசியம் என்றார். மதில் அமைப்பதற்பான செலவை கணக்கிற் கொண்டு, சுவிஸ் வாழ் ஊரைதீவு, மடத்துவெளி மக்களிடம் நிதி சேகரிப்பதெனவும், அப் பணியை பழைய மாணவர் சங்கம் சுவிஸ் கிளை செய்வதாவும் முடிவு செய்யப்பட்டது.
ஊரைதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம் பாழடைந்து போய்க்கிடக்கின்றது. புகழ் பெற்ற எம் பாடசாலை கண் முன்னே அழிகிறது. எனவே அது மீண்டும் புனரமைக்கப்பட்டு, மீளவும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேற்படி விவாதத்திற்கமைய தான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக திரு. சண்முகநாதன் அவர்கள் உறுதி கூறினார். அதற்குரிய செலவு விபரங்களையும் கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் பொறுப்பெடுத்துக்கொண்டது
நீண்ட விவாதங்கள். நேரம் போனதே தெரியவில்லை. தன் அகச் சூழல் காரணிகளை புறந்தள்ளி சமுகத்திற்காய் பாடுபடும் ஓர் மனிதனைச் சந்தித்த சந்தோசம். தேவைகள் அதிகமிருப்பினும் இப்போதைக்கு முடித்துக் கொள்கிறோம். கைகள் கொடுத்து இருட்டினூடே பிரிந்தோம்
ஊரைதீவு, மடத்துவெளி நண்பர்களே உங்களிடம் வருகிறோம். ஒரு சமூகப் போராளி எங்களுக்காய் போராட தயாராயிருக்கிறான். அந்த மனிதனை பயன்படுத்துங்கள்;. அவன் நேர்மையை பயன்படுத்துங்கள். காலம் எமக்கு கட்டளையிடுகிறது. செவி கொடுங்கள். தரத்தின் உச்சத்தில் இருந்த எம் பாடசாலையை மீளக் கட்டியமைப்போம். எம் கிராமங்களுக்கு உயிர் கொடுப்போம். அதற்காய் எம்மோடு கை சேருங்கள்
தோழமையுடன்
கமலாம்பிகை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம்
சுவிஸ் கிளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக