ஞாயிறு, 4 மே, 2014


யாழ். அச்சுவேலியில் வாள் வீச்சு சம்பவம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!- இருவர் கைது
யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாள் வீச்சு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரே இந்த சம்பவத்தில் பலியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்குணானந்தம் அருளநாயகி (50), யசோதரன் மதுஷா (27), நிர்குணானந்தம் சுபாங்கன் (19) ஆகியோரே பலியானவர்களாவர்.
பலியானர்வர்களின் சடலங்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான இருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிர்குணானந்தம் தர்மிகா (25),  த. யசோதரன் (30) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
2ம் இணைப்பு
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று ஞாயிறு காலை கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவரான தனஞ்சயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலைகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரே கொலைகளுக்கு காரணம் என தெரியவந்ததனையடுத்து, ஊரெழுப் பகுதியில் குறித்த நபர் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.
அதேவேளை,  இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த முக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும்  முச்சக்கரவண்டியொன்றினை மீட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
நவக்கிரி என்னும் இடத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த முச்சக்கரவண்டியினுள் பெருமளவு இரத்தக்கறைகள் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக அயலவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
தர்மிகா திருமணமாகி ஒரு பிள்ளையின் தாயாராவர். இவர் தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை விட்டுப் பிரிந்து பிள்ளையுடன் தனது தாய் சகோதரர்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கணவன் இவர்களது வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டதுடன் உங்கள் அனைவரையும் வெட்டிக் கொல்லுவேன் என கூறிச்சென்றதாகவும், அதன் பின்னரே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளதால், அவரே இக்கொலைகளை செய்திருக்கலாம் என அயலவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.
அதேவேளை சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்ததாகவும் இன்னும் ஒரிரு தினங்களில் வெளிநாடு செல்ல இருந்த நிலையிலையிலேயே இக்கொலைகளை செய்து விட்டு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்திருக்கலாம் என அயலவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக