வெள்ளி, 2 மே, 2014


சமூகச் சீரழிவுகளுக்கு பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன!- முதலமைச்சர் விக்னேஸ்வரன்

எமது சகல சமூகச் சீரழிவுகளுக்கும் பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன. தாம் இங்கு தொடர்ந்து இருப்பது உள்ளூர் மக்களுக்கு எரிச்சலையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது என்பதை வெளியார் உணர்ந்தால் அவர்களை வெளியனுப்புவது இலகுவாகிவிடும். இவ்வாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று கொக்குவில் பொதுச்சந்தைத் தொகுதியை திறந்து வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச சபையினால் சுமார் 19.5 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொக்குவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி இன்று காலை 8.00 மணியளவில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவினாலும் திறந்து வைக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தலைமையில நடைபெற்ற இந்நிகழ்வில் பெயர்ப் பலகையை பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் திறந்து வைக்கஇ நினைவுக் கல்லை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன்இ கஜதீபன்இ அனோலட் மற்றும் வலி வடக்குஇ வலி தென் மேற்குஇ வலிமேற்கு சாவகச்சேரி பிரதேச சபைகளின் தலைவர்கள்இ உள்ளராட்சி உதவி ஆணையாளர்இ யாழ் மாவட்ட உதவி ஆணையாளர் உட்பட மற்றும் பொது மக்கள்இ அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு முதலமைச்சர் ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு,
தலைவர் அவர்களே, இணை பிரதம விருந்தினர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே!
மீண்டும் ஒருமுறை நல்லூர் பிரதேச சபை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இம்முறை கொக்குவில் பொதுச்சந்தை திறப்பு விழாவாக உங்கள் கூட்டம் அமைவதை வரவேற்கின்றேன்.
உங்கள் பிரதேச சபை உங்களிடம் இருக்கும் வருமானங்களை வைத்து மக்களுக்குப் பயன் தரும் நடவடிக்கைகளில் இறங்குவதையிட்டு மன மகிழ்வடைகின்றேன்.
நான் முன்னரும் கூறி வந்தது போல் எமது வருங்காலம் எம்மால் எம்மவருக்கு எந்தளவு உதவ முடியும் என்பதிலேயே தங்கியிருக்கின்றது. சில சபை நிறுவனங்கள் தம்மிடம் இருக்கும் பணத்தைப் பூட்டி வைத்து வட்டியை எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆக்க பூர்வமாக மக்கள் பணிகளில் இறங்க வேண்டும் என்ற கரிசனை அவர்களுக்கு இல்லாதிருக்கின்றது.
பணமானது புழக்கத்திற்கு வரவேண்டும். முதலீட்டாளர்கள் ஏன் தமது முதலீட்டை முன்வைத்துப் பலதையும் தொடங்குகின்றார்கள்? அதற்குக் காரணம் பணவீக்கம். பணத்தைப் பணமாகப் பலகாலம் வைத்திருந்தால் அதன் பவிசு குறைந்து விடும். அந்தப் பணத்தைக் கொண்டு நாங்கள் இன்று என்ன செய்ய முடியுமோ அதன் ஒரு பகுதியைத்தான் காலம் போக எம்மால் அப்பணத்தை வைத்துச் செய்ய முடியும்.
நாளாக நாளாகப் பொருட்கள் விலை கூடும். தொழிலாளர் ஊதியம் கூடும். எனவே எமது பணத்தை வைத்து இன்று எம்மால் செய்யக் கூடியதை சில காலத்தின் பின்னர் செய்ய முடியாமல் போய்விடுகிறது. இன்று எம்மால் வாங்கக் கூடியதை அதே பணத்தை வைத்து சில காலத்தின் பின்னர் வாங்க முடியாமல் போய்விடுகிறது.
சிலர் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு வட்டி கூடிச் சென்றால் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் அந்தளவுக்கு வட்டி கிடைக்குமா என்பது ஒரு கேள்வி. அப்படித்தான் கிடைத்தாலும் நிரந்தரமாக அந்தக் கூடும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு வட்டி கிடைக்குமா என்பது அடுத்த கேள்வி?
மேலும் தற்போது எமது கிடைக்கும் வட்டிக்கு வரி கட்ட வேண்டி இருக்கின்றது. அத்துடன் மாதாந்தம் வட்டி வந்து எமது பணம் குட்டி போட்டுக் கொண்டிருக்கும் போது அப்பணம் எமது சூழலுக்கு ஏற்றவாறு புழக்கத்தில் இல்லாது தரித்து நிற்கின்றது என்பதை நாம் மறக்கக் கூடாது.
சேமிப்பு வங்கிக் கணக்குகளில் மட்டும் இலக்கங்களாக நிற்கின்றது அப்பணம். எனவே தான் எமது பிரதேச சபைகள் போன்ற நிறுவனங்கள் தமது வருமானங்களை வளமான வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் எமது மக்கள் பெறும் விதத்தில் செலவழிக்க முன்வரவேண்டும். அதற்கு ஒரு முன்மாதிரியாக உங்கள் பிரதேச சபை விளங்குகின்றது.
இன்று எம்மக்கள் தம்மைத்தாமே வலுவூட்டி வாழ்க்கைத் தரத்தை வளம் பெறச்செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க முன்வரவேண்டும். எல்லா விதமாகவும் எமது இயல்பு வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் தடைசெய்யுமாறான ஒரு சூழ்நிலையே தற்போது விளங்குகின்றது.
இன்றுதான் வடகிழக்கு மாகாண சபைகளில் எந்தளவுக்கு அரசாங்கம் முட்டுக் கட்டைகளை முன்வைத்து எமது முன்னேற்றத்தைத் தடைப்படுத்தி வந்துள்ளது என்பது பற்றி ஒரு சிங்கள ஊடகவியலாளர் கலாநிதி ஜெகான் பெரேரா அவர்கள் எழுதியிருந்த ஆராய்ச்சிக் கட்டுரையைக் கண்ணுற்றேன்.
அதாவது எமக்கு இன்று நடப்பது போல்த்தான் முன்னரும் நடந்து வந்துள்ளது என்பதை அவரின் கட்டுரை ஆராய்ச்சி பூர்வமாக எடுத்துக் காட்டுகின்றது. அரசாங்கம் திட்டமிட்டு இதனைச் செய்வது புலனாகின்றது. எனவேதான் எங்கள் மக்களின் நலனைப் பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டியுள்ளது.
அண்மையில் எமது புதிய வடமாகாண படைத்தளபதி இராணுவத்தினால் பலாலியில் பயிரிட்டு, அறுவடை செய்து, கொண்டு வரப்பட்ட மரக்கறிகளை திருநெல்வேலிச் சந்தையில் விற்பனைக்கு விடப்படாது என்று ஆணையிட்டதால் ஓரளவுக்கு உள்ளூர் மக்களின் மரக்கறி விற்பனைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. அவருக்கு நாம் நன்றி கூறுகின்றோம்.
ஆனால் இதுகாலும் நடந்து வந்த அந்த இராணுவ விற்பனை முறைமை எதிர்காலத்தில் மீண்டும் தெடக்கப்படாது என்பது என்ன நிச்சயம்?
அதனால்த்தான் நான் நேற்றைய மேதினக் கூட்டத்தில் படையினர் வெளியேற வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
எமது சகல சமூகச் சீரழிவுகளுக்கும் பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன.
சுயநல காரணங்களுக்காக உள்ளூர் வாசிகள் இப்பேர்ப்பட்ட வெளியார் உள்ளீடல்களுக்குத் துணை போகின்றார்கள்.
தாம் இங்கு தொடர்ந்து இருப்பது உள்ளூர் மக்களுக்கு எரிச்சலையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது என்பதை வெளியார் உணர்ந்தால் அவர்களை வெளியனுப்புவது இலகுவாகிவிடும்.
ஆனால் எமது உள்ளூர் மக்கள் “வேண்டாம் வேண்டாம்! போகாதீர்கள் வெளியாளர்களே” என்று கூற முன்வாந்தால் எமது வருங்காலம் இருளடைந்ததாகவே இருக்கும் என்பதை எமது மக்கள் உணர்ந்து திருந்த வேண்டும்.
 என்று கூறி என்னை இந்த சந்தை திறப்பு விழாவில் பங்குபற்ற அழைத்தமைக்கு என் நன்றியறிதல்களைக் கூறி என் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணசபை
“படையினரே வெளியேறுங்கள்” என்று ஒலிக்கப் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை! சீ.வி.விக்னேஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக