வியாழன், 1 மே, 2014




சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது எப்படி? என்பது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
அதிகாரி கோவிந்தசாமி
ரெயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது எப்படி? என்று சென்னை சென்டிரல் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தசாமி கூறியதாவது:–

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முதல்முறையாக இந்த மோசமான குண்டு வெடிப்பு சம்பவத்தை சந்தித்து உள்ளது. இது எதிர்பாராமல் நடந்துள்ளது. குண்டு வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பல மாநிலங்களில் பயணம் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் புறப்பட்டு ஆந்திராவில் நுழைந்து, சென்னை நகருக்குள் முதலில் சங்கமிக்கிறது. மீண்டும், சென்னையில் இருந்து புறப்பட்டு ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்கள் வழியாக அசாம் மாநிலம் சென்றடைகிறது.
பெங்களூரில் இருந்து வழக்கமான நேரத்தை காட்டிலும் 1½ மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு உள்ளது. காலதாமதமாக புறப்பட்டது ஏன்? என்பது பற்றி பெங்களூர் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. பெங்களூரில் புறப்பட்ட ரெயில் பெங்களூர் கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை. ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்னை சென்டிரலை வந்து அடைந்துள்ளது. காலை 7.05 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு அந்த ரெயில் வந்தது.
விண்ணை முட்டும் சத்தத்துடன்...
காலை 7.20 மணிக்கு எஸ்.4 பெட்டியில் புகை மூட்டத்துடன் பயங்கரமாக முதல் குண்டு வெடித்துள்ளது. அடுத்த சில வினாடிகளில் எஸ்.5 பெட்டியில் காதை செவிடாக்கும் வகையில் விண்ணை முட்டும் சத்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்து சிதறி உள்ளது.
அப்போது ரெயில்வே பிளாட்பார கண்காணிப்பு பணியில் சென்டிரல் ரெயில் நிலைய அதிகாரிகள் லால்சிங், பால்ராஜ் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி சென்டிரல் ரெயில் நிலைய துணை மேலாளர் பாலசுப்பிரமணிக்கு தகவல் கொடுத்து உள்ளனர். அவர் காலை 7.30 மணிக்கு மருத்துவ குழுவினருடன் குண்டு வெடிப்பு நடந்த 9–வது பிளாட்பாரத்துக்கு சென்றுவிட்டார். காயமடைந்த பயணிகளுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன்பிறகு காயமடைந்தவர்களை ஆம்புலன்சு வேனில் ஏற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தோம்.
எஸ்.5 பெட்டியில் அதிக சேதம்
குண்டு வெடிப்பில் எஸ்.5 பெட்டியில் தான் அதிக சேதம் ஏற்பட்டது. அந்த பெட்டியில் 25–32 வரையிலான இருக்கைகள் சேதமடைந்தன. இறந்துபோன இளம்பெண் சுவாதி, இந்த பெட்டியில் 28–வது இருக்கையில் பயணித்து உள்ளார். அந்த இருக்கைக்கு கீழே தான் குண்டு வெடித்து உள்ளது. குண்டு வெடித்ததில் அந்த பெட்டியில் 1 மீட்டர் அளவுக்கு வட்டமாக பெரிய துவாரம் விழுந்து விட்டது.
எஸ்.4 பெட்டியில் 65 முதல் 72 வரையிலான இருக்கைகள் சேதமடைந்தன. 70–வது இருக்கைக்கு கீழே (கழிவறைக்கு அருகில்) குண்டு வெடித்துள்ளது. குற்றவாளிகள் யார்? என்பதை போலீசார் தான் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக 3 பெட்டிகள்
சம்பவம் நடந்த 9–வது பிளாட்பாரம் அருகே உள்ள 8–வது பிளாட்பாரம் காலியாக இருந்தது. 10–வது பிளாட்பாரத்தில் மட்டும் ஒரு ரெயில் வரவிருந்தது. சம்பவம் நடந்தவுடன், 9, 10 மற்றும் 11–வது பிளாட்பாரங்களில் மற்ற ரெயில்கள் வராமல் காலியாக வைக்கப்பட்டன. அந்த நேரத்தில் அடுத்தடுத்து வரவேண்டிய 5 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
குண்டு வெடித்த ரெயில் பெட்டிகள் எஸ்.4, எஸ்.5 மற்றும் இணைப்பு பெட்டியான எஸ்.3 ஆகிய 3 ரெயில் பெட்டிகளும் 11–வது பிளாட்பாரத்தில் போலீஸ் பாதுகாப்பு வளையத்தோடு தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலானது, புதிதாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு பிற்பகல் 12.15 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக